இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 50 பேர் விடுதலை


கோப்புப் படம்

ராமேசுவரம்: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த செப். 7-ம் தேதிகடலுக்குச் சென்ற 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

முன்னதாக, ஜெகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குச் சென்றஒரு விசைப்படகும், அதிலிருந்த4 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த 18 மீனவர்களின் காவல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன், இவர்களில் 13 மீனவர்கள் மீண்டும் இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையின் பேரில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும், 4 விசைப்படகு ஓட்டுநர்களுக்கும் தலா ஓராண்டு சிறைத் தண்டனையும், 2-வது முறையாக சிறைபிடிக்கப்பட்ட மீனவர் ஒருவருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

கடந்த செப். 21-ம் தேதி நெடுந்தீவு கடல் பகுதியில் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். அவர்களது காவல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நேற்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி கிஷாந்தன், அவர்களது 3 விசைப்படகுகளை நாட்டுடமையாக்கியும், 37 மீனவர்கள் மீண்டும் இலங்கை கடல் பகுதிக்குள் மீன் பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையின் பேரில் விடுதலை செய்தும் உத்தரவிட்டார்

x