சென்னை மெரினா கடற்கரையில் 2-வது நாளாக விமானப்படை சாகச ஒத்திகை


விமானப் படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமானங்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சி 2-வது நாளாக நேற்று நடை பெற்றது. இதில், ரஃபேல், சுகாய், தேஜஸ், சூர்யகிரன் ஆகிய போர் விமானங்கள் மற்றும் சாரங் ஹெலிகாப்டர்கள் சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்திக்காட்டின. | படங்கள்: ம.பிரபு |

சென்னை: விமானப் படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமானங்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சி 2-வது நாளாக நேற்றும் நடைபெற்றது. ரஃபேல், சுகாய், தேஜஸ், சூர்யகிரன் ஆகிய போர் விமானங்கள் மற்றும் சாரங் ஹெலிகாப்டர்கள் நிகழ்த்திக் காட்டிய சாகச நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

இந்திய விமானப் படை தொடங்கப்பட்டு 92-ம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில், வரும் 6-ம் தேதி பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக, இந்திய விமானப்படை விமானங்களின் ஒத்திகை நிகழ்ச்சி, மெரினா கடற்கரையில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாளாக இந்த சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில் விமானப் படையின் ஆகாஷ் கங்கா அணி வானில் குட்டிக் கரணங்கள் அடித்தும், சூர்யகிரண் ஏரோ பாட்டிக் அணி ஸ்கை டைவிங் செய்து விமானங்களுடன் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக வந்தும் சாகசங்களை நிகழ்த்தின.

மேலும், சாரங் ஹெலிகாப்டர்களின் வான் நடனம் ஆகியவை நடைபெற்றன. மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக விமானமான தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் 1971-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட டகோட்டா மற்றும் ஹார்வர்ட் ஆகிய பழங்காலத்து விமானங்களும், அதிநவீன போர்விமானமான ரஃபேல் விமானம் உள்ளிட்டவையும் இந்த சாகசநிகழ்ச்சியில் பங்கேற்று சாகசங் களை நிகழத்தின.

அதேபோல், எம்ஐ-70 ஹெலிகாப்டரில் காமாண்டோ வீரர்கள் வானில் இருந்து குதித்து தீவிரவாதிகளிடம் சிக்கிய பிணைக் கைதிகளைமீட்பது போன்ற சாகச காட்சிகளை தத்ரூபமாக செய்து காட்டினர். சேட்டக் ரக ஹெலிகாப்டர்களில் வீரர்கள் 8 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து தேசியக் கொடியை ஏந்தியபடி சாகசத்தில் ஈடுபட்டனர்.

விமான சாகச நிகழ்ச்சி குறித்து,விமானப் படை அதிகாரி ஏர் கமாடோர் எச்.அசுதானி செய்தியாளர் களிடம் கூறியதாவது: விமானப் படை சாகச நிகழ்ச்சிக்கு தமிழக அரசும், சென்னையில்உள்ள இந்திய விமான ஆணையமும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. இன்றைய ஒத்திகை நிகழ்ச்சியில் அரக்கோணம், கோவை சூளூர், தஞ்சாவூர், பெங்களூரு மற்றும் சென்னை விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 54 விமானங்கள் வந்து ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டன.

4 ஆயிரம் மீட்டர் நீளமான மெரினா கடற்கரை, சாகச நிகழ்ச்சி நடத்துவதற்கு பெரும் உதவியாக உள்ளது. 4-ம் தேதி (நாளை) முழுஅளவிலான ஒத்திகை நிகழ்ச்சிநடைபெறுகிறது. 6-ம் தேதி நடைபெறும் சாகச நிகழ்ச்சியைக் காண சுமார் 15 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே,பொதுமக்கள் குடும்பத்துடன் வந்துஇந்நிகழ்ச்சியை கண்டு ரசிப்ப தோடு, இந்நிகழ்ச்சியை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அரசு விடுமுறை தினம் என்பதால், விமான சாகச நிகழ்ச்சியைக் காண பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று மெரினா கடற்கரையில் திரண்டனர். சிலர் காமராஜர் சாலையி லேயே வாகனங்களை நிறுத்தி சாகசநிகழ்ச்சியைக் கண்டு ரசித்தனர். இதனால் மெரினா கடற்கரை சாலை முழுவதும் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

x