சரக்கு ரயிலில் கொக்கி உடைந்து இன்ஜின், பெட்டி பிரிந்தது: இரண்டரை மணி நேரம் மக்கள் அவதி


சென்னை: மீஞ்சூர் அருகே சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த சரக்கு ரயிலில் இணைப்பு கொக்கி (கப்லிங்) உடைந்து இன்ஜின், பெட்டிதனியே கழன்றது. இதனால், கும்மிடிப்பூண்டி - சென்னை மார்க்கத்தில் இரண்டரை மணி நேரம்ரயில் சேவை பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

தெலங்கானா மாநிலம் மஞ்சேரியில் இருந்துதமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் பேரளத்துக்கு 42 பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பெட்டிகளில் நெல் ஏற்றப்பட்டிருந்தது. இந்த ரயில் நேற்று பிற்பகலில் அனுப்பம்பட்டு - மீஞ்சூர் இடையே மீஞ்சூர்ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது, அந்த ரயிலின் இரண்டு பெட்டிகளுக்கு இடையே இருக்கும் இணைப்பு கொக்கி (கப்லிங்) உடைந்து, இன்ஜினுடன் ஒரு பெட்டி கழன்றுவிட்டது. இதை அறிந்த ரயில் ஓட்டுநர் ரயிலை உடனடியாக நிறுத்தினார். தொடர்ந்து, ரயில்வே உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில், ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள், ரயில்வேபோலீஸார் அங்கு விரைந்து வந்தனர்.

இதற்கிடையில், கும்மிடிப்பூண்டி - சென்னை மார்க்கத்தில் மின்சார ரயில் மற்றும்விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பின்னர், மீஞ்சூர் ரயில் நிலையத்துக்கு கழன்ற பெட்டி, இன்ஜினை எடுத்துவந்தனர். அங்கு உடைந்த இணைப்பு கொக்கியை நீக்கிவிட்டு, புதிய கொக்கியை பொருத்தும் பணிநடைபெற்றது. மாலை 4.35 மணிக்கு புதியகொக்கியை பொருத்தி, இன்ஜின், பெட்டிகளைஇணைத்து மீண்டும் சரக்கு ரயில் சென்னை நோக்கிப் புறப்பட்டது.

இந்த சம்பவத்தால், கும்மிடிப்பூண்டி- சென்ட்ரல் மார்க்கத்தில் இரண்டரை மணி நேரம்ரயில்சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பாதிப்படைந்தனர்.

x