5,000 பேருக்கு வேலை ரெடி - தருமபுரியில் அக்.5-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!


தருமபுரி: தருமபுரியில் வரும் 5-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தருமபுரி மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 5-ம் தேதி தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கிசேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 75-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 5,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யஉள்ளனர்.

5-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம். தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை நாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, dpijobfair2024@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது 04342-296188 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ள வேண்டும். எனவே, தொழில் நிறுவனங்களும், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களும் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

x