மதுரையில் டாஸ்மாக் ஊழியர்கள் அக்.12-ல் உண்ணாவிரத போராட்டம்


கோப்புப் படம்

விருதுநகர்: தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “காலி மது பாட்டில்கள் சேகரிக்கும் உத்தரவைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் அக்.2-ம் தேதி சென்னையில் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த 29-ல் அமைச்சரவை மாற்றத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு இச்சங்கம் சார்பில் வாழ்த்துத் தெரிவிப்பதோடு புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர், சங்கத்தின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து சாதகமான முடிவை மேற்கொள்ள ஏதுவாக சென்னையில் நடைபெற இருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வரும் 12-ம் தேதி மதுரையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர், சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி கோரிக்கைகள் குறித்து முடிவுகளை மேற்கொள்ள இச்சங்கம் கேட்டுக் கொள்கிறது. அப்போது, போராட்டம் நடத்துவதை மறுபரிசீலனை செய்ய இச்சங்கம் முன்வரும் எனத் தெரிவித்துள்ளார்.

x