40% இளைஞர் வாக்குகளை முழுமையாக பெற வேண்டும்: அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்


அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

சென்னை: தமிழகத்தில் உள்ள 40 சதவீத இளைஞர்களின் வாக்குகளை முழுமையாகப் பெற முயற்சிக்க வேண்டும். இழந்த 10 சதவீத வாக்குகளைப் பெற்றாலே வெற்றி உறுதி என்றுசென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தினார்.

அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் மூத்த தலைவர்கள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில்,சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது:

தற்போதைய அரசியல் களம் தகவல் தொழில்நுட்பத்தைப் பெரிதும் சார்ந்துள்ளது. அதனால்தான், இந்திய அரசியலில் தகவல் தொழில்நுட்பப் பிரிவை முதலில் தொடங்கியது அதிமுக. அதிமுகவுக்கு எதிராக சில ஊடகங்களும் பத்திரிகைகளும் திட்டமிட்டு பொய் செய்திகளை பரப்பி வருகின்றன. குறிப்பாக திமுக மேற்கொள்ளும் பொய்ப் பிரச்சாரங்களை அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுதான் முறியடிக்க வேண்டும். அதிமுக மீதான அவதூறுகளை களையச் செய்யும் வலிமை தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு உள்ளது. அதிமுக ஆட்சியில், கடுமையான வறட்சி இருந்தபோதும், பற்றாக்குறை இல்லாமல் குடிநீர் முதல் மின்சாரம் வரை அனைத்தும் முறையாக வழங்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே உள்ளன. அதைக் கருத்தில் கொண்டு தகவல் தொழில் நுட்பப்பிரிவு வலுவாகவும் உத்வேகத்துடனும் செயல்பட வேண்டும். முகநூல், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலை தளங்களிலும் அதிமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவின் செயல்பாடுகள் மிக வலுவாக இருக்க வேண்டும். தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை செல்போன்கள் மூலம் மக்களுக்கு கொண்டு போய்ச் சேர்ப்பதில் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் முக்கியப் பங்காற்ற வேண்டும்.

தமிழகத்தில் 40 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் வாக்குகள் முழுவதையும் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். பொய் செய்திகள் மூலம் இளைஞர்களை ஏமாற்றும் தந்திரத்தை திமுக கையில் எடுத்துள்ளது. அதை நாம் முறியடித்தாக வேண்டும். கடந்த தேர்தலில் இழந்த 10 சதவீத வாக்குகளைப் பெற்றாலே நாம் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவோம். இவ்வாறு பழனிசாமி பேசினார்.

இக்கூட்டத்தில், அதிமுக தகவல்தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ் சத்யன் வரவேற்றார். நிறைவில், இணைச் செயலாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான எம்.கோவை சத்யன் நன்றி கூறினார். அதிமுக அவைத் தலைவர் அ.தமிழ்மகன் உசேன், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

x