இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த கோரி தமிழகம் முழுவதும் அக்.7-ல் ஆர்ப்பாட்டம்: கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவிப்பு


சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா. முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்) லிபரேஷன் மாநில செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

பாலஸ்தீன அப்பாவி மக்கள் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் தொடங்கிய கொடூரத் தாக்குதல் ஓர் ஆண்டாக நீடித்து வருகிறது. இதுவரை 42 ஆயிரம்அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

லெபனான் நாட்டில், மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீன மக்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளைக் கண்டித்தும், இஸ்ரேல் அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்தக் கோரியும், மோடி தலைமையிலான மத்திய அரசு மறைமுகமாக இஸ்ரேலுக்கு ஆயுத உதவி செய்வதைக் கண்டித்தும், அக்.7-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x