சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியிலிருந்து மோப்ப நாய் சீசர் ஓய்வு: புதிதாக சேர்க்கப்பட்ட 9 மாத ‘யாழினி’க்கு உற்சாக வரவேற்பு


சென்னை: சென்னை விமான நிலைய பாதுகாப்புப் பணியில் கடந்த 8 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்ட 9 வயது மோப்ப நாய் சீசர் பணி ஓய்வு பெற்றதால், பதக்கங்கள் வழங்கி, கேக் வெட்டி, சிகப்புக் கம்பள விரிப்பில் அணிவகுப்பு மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப்பட்டது. மேலும் புதிதாக பணியில் சேர்க்கப்பட்ட 9 மாத மோப்ப நாய் யாழினிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் (சிஐஎஸ்எப்) ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டுகள், அபாயகரமான பொருட்கள், ஆயுதங்கள், போதைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கண்டுபிடிக்கவும், முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்புப் பணிக்காகவும் மோப்ப நாய்கள் `ஸ்குவாட்' பிரிவை அவர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இந்தப் பிரிவில், பயிற்சி பெற்ற 10 மோப்ப நாய்கள் உள்ளன. மோப்ப நாய்கள் ஷிப்ட் முறையில், 24 மணி நேரமும் சென்னை விமான நிலையத்தில் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.

மோப்ப நாய்கள் பிரிவில் கடந்த 2016-ம்ஆண்டு பணியில் சேர்ந்த சீசர் என்ற 9 வயது மோப்ப நாய், தனது எட்டரை ஆண்டுக்கால பணியை நேற்றுடன் நிறைவு செய்து பணியிலிருந்து ஓய்வு பெற்றது. அதற்கு வழியனுப்பு, பிரிவு உபசார விழா சென்னை பழவந்தாங்கலில் உள்ளசிஐஎஸ்எப் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது சீசருக்கு, பதக்கங்கள், மாலைகள் அணிவிக்கப்பட்டன. சீசருக்கு பதிலாக, புதிதாக வந்துள்ள யாழினி என்ற 9 மாத மோப்ப நாய்க்கு, வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியும் அங்கே நடந்தது.

விழாவில் கேக் வெட்டப்பட்டு, இரு மோப்ப நாய்களுக்கும் வழங்கப்பட்டது. பின்னர், சிகப்பு கம்பள விரிப்பில், ஓய்வு பெறும் சீசர் அழைத்து வரப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றப்பட்டது. அந்த வாகனத்தை மத்திய தொழில் பாதுகாப்புப் படை டிஐஜி அருண்சிங், சென்னை விமான நிலைய இயக்குநர் தீபக் உள்ளிட்டோர் இழுத்துச் சென்று, சீசரை வழி அனுப்பி வைத்தனர். சீசரை கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் பராமரித்து வந்த பாதுகாவலர்கள், கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர்.

புதிதாக பணியில் சேர்ந்துள்ள 9 மாத மோப்ப நாய் யாழினி, லாப்ரடோர் ரெட்ரீவர் இனத்தைச் சேர்ந்தது. இதற்கு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை பயிற்சிப் பள்ளியில் 6 மாத காலம் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு, இங்கு அழைத்து வரப்பட்டுள்ளது. யாழினி வெடிபொருள், போதைப் பொருள், வாகனங்களை பரிசோதித்து மறைத்து வைத்துள்ள ஆயுதங்களைக் கண்டுபிடிப்பது, பயணிகளின் உடைமைகளை சோதனை செய்வது போன்றவற்றில் சிறப்பான பயிற்சி பெற்றுள்ளது.

சென்னை விமான நிலைய சிஐஎஸ்எப் அதிகாரிகள் கூறுகையில், ``பணி ஓய்வு பெற்றுள்ள மோப்ப நாய் சீசர், சில நாட்கள் சென்னையில் மோப்ப நாய்கள் பிரிவில் வைக்கப்பட்டு இருக்கும். பின்னர், ராஞ்சியில் உள்ள சிஐஎஸ்எப் பயிற்சி மையத்தில் உள்ள ஓய்வு பெற்ற மோப்ப நாய்களுடன் சேர்க்கப்படும். சீசரை தத்து எடுப்பதற்கு, யாராவது முன் வந்தால், விதிமுறைகளின்படி, ஒப்பந்தம் செய்துவிட்டு, அவர்களிடம் ஒப்படைக்கப்படும்'' என்றனர்.

x