காவிரி பிரச்சினையில் அரசியல் கலக்க கூடாது: மத்திய அமைச்சர் குமாரசாமி கருத்து


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று தரிசனம் செய்ய வந்த மத்திய அமைச்சர் குமாரசாமியை வரவேற்ற கோயில் அர்ச்சகர்கள்.

திருச்சி: காவிரி பிரச்சினையில் அரசியல் கலக்கக்கூடாது என மத்திய அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.

பெங்களூருவில் இருந்து நேற்றுதனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறியது: உரிய காலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யும்போது காவிரி விவகாரத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. மழைப்பொழிவு குறைவாக இருக்கும்போதுதான் நீர் பங்கீட்டில் பிரச்சினை ஏற்படுகிறது. இதை தமிழக அரசும், தமிழக விவசாயிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டங்கள் உதவாது. இருதரப்பும் விட்டுக் கொடுத்து போவதுதான் இதற்கு தீர்வாக இருக்க முடியும். இரு மாநில விவசாயிகளும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். காவிரி பிரச்சினையில் அரசியல் கலக்கக் கூடாது.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டது தமிழகத்தின் அரசியல் விவகாரம். இதில் நான் கருத்துக் கூற விரும்பவில்லை. கடந்த சில ஆண்டுகளாக நலிவடைந்துள்ள சேலம்உருக்காலைக்கு மீண்டும் புத்துயிர் அளித்து, சிறப்பாக செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்

x