இலங்கை சிறையில் உள்ள 17 மீனவர்களை விடுவிக்க வேண்டும்: குடும்பத்தினர் வலியுறுத்தல்


ஆட்சியரை சந்திக்க வந்த இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள்.

ராமநாதபுரம்: இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 17 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் ராமநாதபுரம் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று தங்கச்சிமடத்தைச் சேர்ந்த செல்வம், உதிர்தராஜ் ஆகியோருக்கு சொந்த 2 விசைப் படகுகளில் 17 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். மன்னார் கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 2 படகுகளையும், 17 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. பின்னர் மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வவுனியா சிறையில் அடைத்தது. இந்நிலையில் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், மீனவர்கள் இதைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களை ஆட்சியரிடம் அழைத்துச் சென்று மீனவர்களை விடுவிப்பதற்கான கோரிக்கையை முன்வைப்பதாக தெரிவித்திருந்தனர்.

அதன்படி இன்று (செப்.30) பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் ராமேசுவரம் விசைப்படகு மீனவர் நலச்சங்க தலைவர் காரல் மார்க்ஸ், பாம்பன் முன்னாள் ஊராட்சித் தலைவர் பேட்ரிக், மீனவர் சங்க நிர்வாகி முருகானந்தம் உள்ளிட்டோர் இன்று ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோனை சந்தித்து, சிறைப்பிடிக்கப்பட்ட விசைப் படகுகளையும், 17 மீனவர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆட்சியர் இதுகுறித்து அரசிடம் பேசி வருவதாகவும், விரைந்து மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மீனவர் சங்க தலைவர் காரல் மார்க்ஸ் கூறும்போது, "கடந்த 11 ஆண்டுகளாக சிறைப்பிடிக்கப்பட்ட படகுகள் மீட்கப்படவில்லை. மீனவர்கள் தங்கள் வயிற்று பசிக்காக மீன்பிடிக்கச் செல்கின்றனர். குடும்பத்தில் மீனவர் ஒருவர் மீன்பிடிக்கச் சென்றால் மட்டுமே அவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் பசியாற முடியும். எனவே சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க பிரதமர் மற்றும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த கட்டமாக மீனவர்களும், மீனவ குடும்பங்களும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.

x