செங்கோலைக் கொண்ட நமது மன்னர்கள், அந்தப்புரத்தில் பெண் அடிமைத்தனத்தை கோலோச்சினார்கள் என ஒட்டுமொத்த தமிழ் கலாச்சாரத்தின் மீதும் சேற்றை வாரி இறைத்துள்ளார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று மக்களவையில் செங்கோல் குறித்து மதுரை எம்.பியான சு.வெங்கடேசன் பேசிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குடி உயரக் கோல் உயரும்; கோல் உயரக் கோன் உயர்வான்" என்பதற்கிணங்க, தர்மத்தை நிலைநாட்டும் செங்கோலை தங்கள் அதிகாரச்சின்னமாக கொண்டு ஆண்டனர் நமது தமிழ் மன்னர்கள்.
பார் போற்றும் செங்கோலைக் கொண்ட நமது மன்னர்கள், அந்தப்புரத்தில் பெண் அடிமைத்தனத்தை கோலோச்சினார்கள் என ஒட்டுமொத்த தமிழ் கலாச்சாரத்தின் மீதும் சேற்றை வாரி இறைத்துள்ளீர்கள் சு.வெங்கடேசன்.
நமது தமிழ் மன்னர்களின் பெருமைகளையும், தமிழ் பெண்களின் மானத்தையும் ஒருசேர கழுவில் ஏற்றி காவு கொடுக்க முயற்சி செய்யும் உங்கள் தமிழ்ப்பற்று புல்லரிக்க வைக்கிறது. எப்பொழுதும் போல் இதையும் கண்டும் காணாமல் கடந்து செல்லும் உங்கள் கூட்டணிக் கட்சியின் பெண்ணியப் போராளி கனிமொழி அவர்களின் போக்கு உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது.
உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக நமது பெருமைமிகு தமிழ் வரலாற்றை எவ்வளவு கீழ்த்தரமாக கேவலப்படுத்தவும் நீங்கள் தயங்கமாட்டீர்கள் என்பதற்கு இது மற்றொரு சான்று!’ என்று குறிப்பிட்டுள்ளார்