சர்ச்சை... காத்திருக்க வைத்த போலீஸ்காரருக்கு டோஸ்விட்ட அமைச்சரின் மனைவி!


காவல் அதிகாரியை கண்டித்த அமைச்சர் மனைவி ஹரிதா ரெட்டி

ஆந்திர பிரதேசத்தில் அமைச்சர் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டியின் மனைவி, ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது, தன்னை காத்திருக்க வைத்த போலீஸ் அதிகாரியை கண்டித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநில அமைச்சர் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி மனைவி ஹரிதா ரெட்டி. இவர் அண்ணாமையா மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் தன்னை அரை மணி நேரம் காக்க வைத்ததாக கூறி, காருக்குள் இருந்தவாறு, ரமேஷ் என்ற உதவி காவல் ஆய்வாளரை, ஹரிதா ரெட்டி கண்டிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில் ஹரிதா ரெட்டி அந்த உதவி காவல் ஆய்வாளரிடம், “இன்னும் விடியவில்லையா? நீங்கள் எந்த மாநாட்டை நடத்துகிறீர்கள்? நீங்கள் ஒரு திருமணத்துக்கு வந்திருக்கிறீர்களா அல்லது கடமைக்காக வந்திருக்கிறீர்களா? உங்களுக்காக அரை மணி நேரம் காத்திருந்தேன்.

உங்கள் சம்பளத்தை யார் வழங்குகிறார்கள்? அரசா அல்லது ஒய்எஸ்ஆர் காங்கிரஸா?” என கேள்வி எழுப்பினார்.

அதைத் தொடர்ந்து, உதவி காவல் ஆய்வாளர் ஹரிதா ரெட்டிக்கு சல்யூட் அடித்து, கான்வாய் வாகனத்தை வழிநடத்த முன்னோக்கி சென்றார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கண்டனம்

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “அமைச்சரின் மனைவியும் அமைச்சர் போன்று அதிகாரத்தை விரும்புகிறார். அமைச்சர் ராம்பிரசாத் ரெட்டியின் மனைவி,

தனது பாதுகாவலராக வருமாறு காவல்துறையினரை பணிக்கிறார். காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கிறார். அச்சமடைந்த காவல் துறை அதிகாரி, உதவியற்ற நிலையில் அவருக்கு தலை வணங்குகிறார்" என குறிப்பிட்டுள்ளது.

x