கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பிளஸ் 2 மாணவிக்கு, சக மாணவர் தாலி கட்டிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அந்த மாணவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் பிளஸ் 2 மாணவியும், அதே வகுப்பில் பயின்று வரும் மாணவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த மாணவரும், மாணவியும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாணவியை திடீரென காணவில்லை. இதனால் அவரை பல இடங்களில் தேடிய மாணவியின் பெற்றோர் இதுகுறித்து தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, மாணவியை கண்டறிந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் தன்னை காதலித்த மாணவருடன், மாயமான மாணவி தாலி கட்டிக் கொண்ட நிலையில், பள்ளி சீருடையில் இருக்கும் புகைப்படங்கள் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கிடையே, மாணவிக்கு தாலி கட்டிய மாணவர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாணவியின் பெற்றோர் தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பள்ளியின் தலைமை ஆசிரியர், உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், இதுகுறித்து குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறும் மாணவியின் பெற்றோர், உறவினர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவரை கைது செய்தனர். மேலும், மாணவியை மீட்டு கரூரில் உள்ள தனியார் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.