வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டரின் விலையை 31 ரூபாய் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, வாகன எரிவாயு, ஆகியவற்றின் விலையில் மாற்றம் இன்றி இருந்து வந்தது. குறிப்பாக கடந்த 106 நாட்களாக பெட்ரோல் டீசல் மற்றும் சிஎன்ஜி எனப்படும் வாகன எரிவாயு விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதனிடையே தேர்தல் முடிந்த பிறகு இதன் விலைகள் அதிகரிக்க கூடும் என பெரிதும் அஞ்சப்பட்டது.
ஆனால் மத்திய அரசு அதுபோன்ற எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் தற்போது வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டருக்கு விலை குறைப்பு செய்து மத்திய அரசின் கீழ் இயங்கும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுவரும் நிலையில், மாதத்தின் முதல் நாளான இன்று கியாஸ் சிலிண்டரின் விலையை 31 ரூபாய் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
இதன்படி கடந்த மாதம் 1,840 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ஒன்று, தற்போது 1,809 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் குறைய வாய்ப்புள்ளதாக மக்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை 70 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.