டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ரோகித் ஷர்மா, சூர்யகுமார் அடுத்தடுத்து அவுட்; திணறும் இந்தியா!


டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா அணியின் ரோகித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் உட்பட முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்ததால் திணறி வருகிறது.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப்போட்டி பார்படாஸின் பிரிட்ஜ்டவுன் நகரில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர். முதல் ஓவரில் கோலி அதிரடியாக ஆடியதால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடினர். ஆனால் அந்த மகிழ்ச்சி இரண்டாம் ஓவரில் நீடிக்கவில்லை. கேசவ் மகாராஜ் வீசிய 2வது ஓவரின் 4வது பந்தில் ரோகித் ஷர்மா 9 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதே ஓவரின் கடைசி ஓவரில் ரிஷப் பந்த் டக் அவுட்டானார். இதனை தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் 4வது ஓவரில் ரபாடா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய ஆல்ரவுண்டர் அக்சர் படேல், விராட் கோலியுடன் கைகோத்து நிதானமாக ஆடி வருகிறார். இந்திய அணி 9 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் எடுத்துள்ளது ரோகித் ஷர்மா இந்த சீசன் முழுவதும் அதிரடியாக கலக்கி வந்தார். அதேபோல சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பந்தும் இந்த சீசனில் சிறப்பாகவே ஆடி வந்தனர். இந்த சூழலில் இவர்கள் மூவரின் விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இன்றி இன்றைய போட்டியில் பங்கேற்கிறது.

x