டெல்லியில் கனமழையின் போது கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் மூவர் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் ஒருவர் மட்டும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் கடந்த மாதம் முழுவதும் கடுமையான வெப்பம் சுட்டெரித்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நகரின் மையப்பகுதியிலும் மழை காரணமாக வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனிடையே நேற்று வசந்த் விஹார் பகுதியில் வீடு ஒன்றின் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்டு இருந்த அஸ்திவாரக் குழியின் அருகே தொழிலாளர்கள் சிலர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு பெரும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று தொழிலாளிகள் உயிருடன் மண்ணில் புதைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளை துவக்கினர்.
இந்நிலையில் இன்று காலை தண்ணீரில் மூழ்கிய ஒரு தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டது. மேலும் இருவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் பெய்த கனமழை காரணமாக விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, 8 பேர் காயமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.