அயோத்தி ராமர் கோயில் முதல் டெல்லி விமான நிலையம் வரை பாஜக கட்டுமானங்கள் அனைத்திலும் ஊழல்; ஆம் ஆத்மி தாக்கு!


இடிந்து விழுந்த டெல்லி விமான நிலையத்தின் முனையம் 1 மேற்கூரை

அயோத்தி ராமர் கோயில் முதல் டெல்லி விமான நிலையம் வரை, நாட்டின் பல்வேறு கட்டுமானங்கள் இடிந்து விழுவது தொடர்பாக ஆளும் பாஜகவை ஆம் ஆத்மி சாடி உள்ளது.

கனமழை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 1 உட்பட பல்வேறு கட்டமைப்புகள் இடிந்து விழுந்தது தொடர்பாக, மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை ஆம் ஆத்மி கட்சி இன்று கடுமையாக சாடியது. இந்த வகையில் ராஜ்யசபா எம்.பி-யான சஞ்சய் சிங், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்ததாகக் கூறப்படும் கட்டமைப்புகளை பட்டியலிட்டுள்ளார்.

அயோத்தி ராமர் கோயில்

’ராமர் கோயில் அமைந்திருக்கும் நகரமான அயோத்தியால் கூட முதல் மழையைத் தாங்க முடியவில்லை’ என்று, மழைக்கு சேதமடைந்த நாட்டின் பல்வேறு கட்டுமானங்களை பட்டியலிடுவதை ஆரம்பித்தார். “முதல் மழைக்கே அயோத்தி ராமர் கோயிலின் கருவறைக்குள் நுழைந்தது. இது கோயிலின் தலைமை பூசாரிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது” என்று சஞ்சய் சிங் கூறினார். ஆனால் ராமர் கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா இந்த குற்றச்சாட்டுகளை முன்பே மறுத்திருந்தார்.

விரிசல் ஏற்பட்டதாக காங்கிரஸ் கூறிய அடல் சேது பாலம் போன்ற பிற திட்டங்களின் நிலையையும் சஞ்சய் சிங் சுட்டிக்காட்டினார். உல்வேயில் உள்ள அடல் சேதுவை இணைக்கும் அணுகுமுறை சாலையில் மட்டுமே சிறு விரிசல்கள் காணப்பட்டதாகவும், அது பாலத்தின் ஒரு பகுதி அல்ல என்றும் மும்பை பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம் பின்னர் விளக்கம் அளித்திருந்தது.

ஆம் ஆத்மி எம்பி- சஞ்சய் சிங்

ஜபல்பூர் முனையம் இடிந்து விழுந்தது, புந்தேல்கண்ட் விரைவுச் சாலையின் அழிவு மற்றும் டெல்லி விமான நிலைய முனையம் 1 இன் மேற்கூரை இடிந்து விழுந்தது போன்றவற்றை மேற்கோள் காட்டி, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய்சிங் பாஜகவை தாக்கினார். “டெல்லி விமான நிலைய முனையம் 1-இன் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் மிகவும் வெட்கக்கேடானது. இவை பாஜக ஆட்சியில் தொடரும் ஊழல்களை சுட்டிக்காட்டுகின்றன” என்று சஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

x