ஒடிசாவில் உள்ள ரூர்கேலா அரசு மருத்துவமனையில் ஏழு மாதங்களுக்கு மேல் டாயலிசிஸ் மருத்துவராக பணியாற்றிய ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள ரூகேலா அரசு மருத்துவமனையில் 7 மாதங்களாக ஜார்க்கண்ட் மாநிலம், சிங்பூம் மாவட்டத்தில் உள்ள தியாசராவைச் சேர்ந்த பத்மநாபன் முகி கருவா என்பவர் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக ஆள்மாறாட்டம் செய்ததற்காகவும், நோயாளிகளுக்கு சிகிச்சையளித்ததற்காகவும் காவல் துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார்.
ஜார்க்கண்ட் மருத்துவர் ரமேஷ் சந்திர ஜாவின் போலி சான்றிதழை அவுட்சோர்சிங் நிறுவனம் மூலம் தயாரித்து பத்மநாபன் ஏழு மாதங்களுக்கும் மேலாக அரசு மருத்துவமனையின் டயாலிசிஸ் பிரிவில் மருத்துவராக பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது. குற்றம் சாட்டப்பட்ட பத்மநாபன் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.
இதுதொடர்பாக ரூர்கேலா அரசு மருத்துவமனையின் இயக்குநர் கணேஷ் தாஸ் கூறுகையில்," பத்மநாபன் முகி கருவா கடந்த 2019-ம் ஆண்டில் நுவா கிராமத்தில் உள்ள நோயாளிகளுக்கு போலிச் சான்றிதழ்களைக் காட்டி சிகிச்சை அளித்ததற்காக காவல் துறையால் கைது செய்யப்பட்டவர்" என்று கூறினார்.