மதுபான கூடங்கள் மீது புல்டோசர் நடவடிக்கை... புனே போதை சம்பவத்தை அடுத்து பரவும் அதிரடிகள்


பார்களை தரைமட்டமாக்கும் புல்டோசர்

புனே போதைப்பொருள் வழக்கின் எதிரொலியாக, பப்கள், பார்கள் மற்றும் போதைப் பொருட்களை விற்பனை செய்யும் சட்டவிரோத நிறுவனங்கள் மீது ’தானே முனிசிபல் கார்ப்பரேஷன்’ புல்டோசர் நடவடிக்கை எடுத்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனே ஹோட்டலில் இளைஞர்கள் போதைப்பொருள் உட்கொண்டதாகக் கூறப்படும் வைரல் வீடியோக்கள் தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில், தானே முனிசிபல் கார்ப்பரேஷன், நகரத்தில் உள்ள பல சட்டவிரோத பார்கள் மற்றும் பப்கள் மீது புல்டோசர் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

போதைப்பொருள்

தானே மற்றும் மீரா-பயந்தர் பகுதிகளை போதையில்லா பிராந்தியமாக மாற்ற மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டதை அடுத்து, தானே முனிசிபல் கார்ப்பரேஷன் கமிஷனர் சவுரப் ராவ் உத்தரவின் பேரில் நகரின் பல்வேறு வார்டுகளில் இந்த நடவடிக்கைகள் பாய்ந்தன.

இரண்டு நாட்களுக்கு முன்பு, புனேவில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் மீது இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. செல்வந்தர்களுக்கான பார் ஒன்றின் கழிவறையில் இரு இளைஞர்கள் போதைப்பொருள் உட்கொண்ட விவகாரம் வெடித்ததை அடுத்தும், அந்த பார்கள் பரிந்துரைக்கப்பட்ட நேரத்தை மீறி திறந்திருந்ததை அடுத்தும் நடவடிக்கைகள் பாய்ந்தன.

"முனிசிபல் கார்ப்பரேஷன் எல்லையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 100 மீட்டருக்குள் மொத்தம் 31 பான் ஸ்டால்கள் பறிமுதல் நடவடிக்கைகளுக்கு ஆளாயின. அதே வேளையில், ஓட்டல்கள், மதுக்கடைகள், பார்கள் உட்பட 8 சட்டவிரோத நிறுவனங்கள் இடிக்கப்பட்டன" என்றும் தானே முனிசிபல் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கான பிரத்யேக பார் மீது புல்டோசர் நடவடிக்கை

வாக்லே எஸ்டேட் பகுதியில் பஞ்சசீல் பார், இந்தியன் டேஸ்ட் பார், அங்கீகரிக்கப்படாத பான் ஸ்டால்கள் மற்றும் குட்கா விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. வர்தக் நகர் வார்டு கமிட்டி பகுதியில் உள்ள சீக்ரெட் பார் மற்றும் ஹூக்கா பார்லர் மற்றும் கோத்தாரி காம்பவுண்டில் உள்ள பப்கள் மற்றும் பார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சோஷியல் ஹவுஸ் பப்பின் அங்கீகரிக்கப்படாத கட்டுமானமும் இடிக்கப்பட்டது.

இதேபோல், கோட்பந்தர் சாலையில் உள்ள குஷி லேடீஸ் பார் மற்றும் ஓவாலாவில் உள்ள மயூரி லேடீஸ் பார் ஆகியவை தரைமட்டமாக்கப்பட்டன. நகராட்சி அதிகார வரம்பில் உள்ள அங்கீகரிக்கப்படாத ஹோட்டல்கள், பப்கள் மற்றும் பார்கள் முற்றிலுமாக அகற்றப்படும் வரை நடவடிக்கை தொடரும் என்று தானே முனிசிபல் கார்ப்பரேஷன் துணை ஆணையர் ஜி.ஜி.கோடோபுரே தெரிவித்தார்.

x