கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக அறவழியில் போராட்டம் செய்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் கள்ளக்குறிச்சியே கண்ணீரில் மிதக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த கோரியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பழச்சாறு அருந்தி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் முடித்துக்கொண்டனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்கையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘உண்ணாவிர போராட்டத்திற்கு ஆதரவளித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் தலைவர் சீமான், புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், செ.கு தமிழரசன் ஆகியோருக்கு நன்றி. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தால், பல உயிர்களை இழந்துவிட்டோம். கள்ளக்குறிச்சி நகர மையப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. இன்று வரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபற்றி பேச வாய்ப்பு கேட்டும், பேரவை தலைவர் அனுமதி அளிக்கவில்லை.
தொடர்ந்து மக்களின் குரல் ஒலிக்க வேண்டும் என்று முறையாக மனு அளித்து, அதன் மீது பேச வாய்ப்பு கேட்டோம். எங்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அதன் பிறகு பதிலளிக்கலாமே? கேள்வி நேரத்திற்கு பிறகு இதை எடுத்துக்கொள்ள முடியாது என்கிறார்கள். ஆனால் எங்களை வெளியேற்றிவிட்டு முதல்வர் ஸ்டாலின் 15 நிமிடம் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றி பேசுகிறார்.
கள்ளச்சாராயம் அருந்தி 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு பக்கம் மாவட்ட ஆட்சியர், இன்னொரு பக்கம் திமுக எம்எல்ஏ என இருவரும், அதை வதந்தி என்றும், தவறான செய்தி வெளியிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள். இந்த ஆட்சியின் அவல நிலை இதுதான். ஒரு அமைச்சர் நான் சட்டமன்றத்தில் இருந்திருந்தால் கிழித்திருப்பேன் என்று கூறுகிறார். நான் எந்த அளவில் எப்படி பேசுவேன் என்பது எல்லாருக்கும் தெரியும். நான் பேசுவதை எல்லாம் சட்டப்பேரவையில் நேரலையில் ஒளிபரப்பு செய்து இருந்தால் நான் கிழி கிழியென்று கிளித்திருப்பேன். ஆனால் அந்த வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்கள். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக அறவழியில் போராட்டம் செய்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் கள்ளக்குறிச்சியே கண்ணீரில் மிதக்கிறது. யாருக்கும் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை.
இன்று பாதிக்கப்பட்டர்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் கூட இல்லை. ஆனால் அதிகார மமதையில் பேசுகிறார்கள். 40க்கு 40ம் வென்றுவிட்டதால், அதிமுகவினரால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை என்கிறார் முதல்வர் ஸ்டாலின். 2014ல் நீங்கள் என்ன நிலையில் இருந்தீர்கள்? சக்கரம் சுழன்றுக்கொண்டே இருக்கும். கீழே இருப்பவர்கள் மேலே வருவார்கள். நாங்கள் அரசியல் செய்வதாக ஸ்டாலின் சொல்கிறார். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள் என்றார். எங்கள் எம்.எல்.ஏ செந்தில்குமார் அனைவரிடமும் முறையிட்டார். கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கெஞ்சினார். இந்த சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கூட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிததார்." என்று அவர் தெரிவித்தார்.