சபாநாயகர் தேர்தல் நடக்க என்டிஏ தான் காரணம்... காங்கிரஸ் வேட்பாளர் கே.சுரேஷ் குற்றச்சாட்டு!


காங்கிரஸ் வேட்பாளார் கொடிக்குன்னில் சுரேஷ்

மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறுவதற்காக முழு பொறுப்பும் தேசிய ஜனநாயக கூட்டணியையே சாரும் என்று காங்கிரஸ் வேட்பாளார் கொடிக்குன்னில் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புதிய மக்களவை தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மக்களவை தலைவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். ஆனால், முதல் முறையாக மக்களவைத் தலைவர் பதவிக்கு இந்த முறை போட்டி ஏற்பட்டுள்ளது.

கொடிக்குன்னில் சுரேஷ், ஓம் பிர்லா

மக்களவை தலைவர் பதவிக்கு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இந்த நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் கே.சுரேஷ், மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் கட்டாயத்தை மத்திய அரசு தான் உருவாக்கியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவை சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த கொடிக்குன்னில் சுரேஷ்

இதுதொடர்பாக அவர் கூறுகையில்," மக்களவை சபாநாயகர் தேர்தலுக்காக ஆளுங்கட்சி எங்களை அணுகியபோது நாங்கள் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு அளித்தால் சபாநாயகர் தேர்தலில் ஆதரவு என்றே கூறினோம். ஆனால், காலை 11.30 மணி வரை அவர்கள் இது தொடர்பாக எவ்வித உறுதியும் தெரிவிக்கவில்லை. மேலும், அவர்கள் அளித்த பதிலும் திருப்திகரமாக இல்லை. அதனால் எங்கள் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்தனர்.

இந்தத் தேர்தல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைமையின் பிடிவாதத்தையே காட்டுகிறது. அந்தப் பிடிவாதத்தை அவர்கள் கைவிட்டிருந்தால் இந்தத் தேர்தலுக்கான தேவையே இருந்திருக்காது. எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க அவர்கள் விரும்பவில்லை.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி

இந்தத் தேர்தல் நடைபெறுவதற்கான முழுப் பொறுப்பும் என்டிஏவையே சாரும்" என்று அவர் தெரிவித்தார். இதற்கிடையில், மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷை ஆதரிப்பதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

x