கல்வி உதவிக்கான முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்காக முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு’ நடக்கிறது. இதில் 1.000 மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் இளநிலை படிப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித் தொகை தரப்படுகிறது.
இந்த தேர்வு ஜூலை 21-ம் தேதி நடைபெற உள்ளது- இந்த திறனாய்வுத் தேர்வுக்கு, அரசுப்பள்ளிகளில் இந்த கல்வியாண்டு பிளஸ்1 படிக்கும் மாணவர்கள் தலைமை ஆசிரியர்கள் வாயிலாக ஜூன் 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது இந்த கால அவகாசம் ஜூலை 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், "தமிழ்நாடு முதலமைச்சரின்திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2023-2024 ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்று 2024-2025-ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 21.06.2024 பிற்பகல் முதல் 26.06.2024 வரை பதிவேற்றம் செய்திட கால அவகாசம் வழங்கப்பட்டது.
தற்போது இக்கால அவகாசம் 03.07.2024 வரை நீட்டிக்கப்படுகிறது என்ற விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்து அதிக எண்ணிக்கையுள்ள மாணவர்கள் விண்ணப்பித்திட தலைமையாசிரியர்களுக்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.