தமிழக அரசின் அலட்சியப் போக்கே காரணம் - கள்ளக்குறிச்சி விவகாரத்துக்கு இயக்குநர் இரஞ்சித் கண்டனம்!


இயக்குநர் பா. ரஞ்சித்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் மெத்தனப் போக்கைக் காட்டுகிறது என இயக்குநர் பா. இரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை முப்பதைக் கடந்துள்ளது அனைவரையும் பதற வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகர், தவெக தலைவர் விஜய் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

கள்ளக்குறிச்சி சம்பவம்...

திரைத்துறையில் இருந்து நடிகர் விஜய் மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ளார் எனவும் தங்களை சமூக அக்கறை உள்ளவர்களாகக் காட்டிக் கொள்ளும் நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், ரஜினி யாரும் ஏன் வாய் திறந்து தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை எனவும் பலரும் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், இயக்குநர் பா. இரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில், ‘கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக்கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதற்கு வன்மையான கண்டனங்கள்! சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரைக் கடுமையாகத் தண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!

மேலும், சமீப காலமாக தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி, நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதனால் அவர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரமும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாகக் கருதி அவர்களின் நிலையை மாற்ற மாவட்ட ஒன்றியங்கள் தோறும், மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவோம்!’ எனக் கூறியுள்ளார்.

x