திரைத்துறையினர் யாரைக் கண்டு அஞ்சுகிறார்கள்? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி


முதல்வர் ஸ்டாலினுடன் திரைத்துறையினர்...

'கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நடிகர் விஜய் மட்டுமே குரல் கொடுத்துள்ளார். மற்ற திரைத்துறையினர் யாரைக் கண்டு அஞ்சுகிறார்கள்?’ என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற கள்ளச்சாராய சம்பவத்திற்கு தமிழக அரசின் மீது அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி விவகாரம்

தவெக தலைவர் விஜயும் தமிழக அரசு நிர்வாகத்தின் அலட்சியமே கள்ளக்குறிச்சி விவகாரம் என குற்றம் சாட்டி ட்வீட் பதிவிட்டார். திரைத்துறையில் விஜய் மட்டுமே கண்டனம் தெரிவித்தார் எனவும் மற்றவர்கள் யாரைக் கண்டு அஞ்சுகிறார்கள் எனவும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில், ‘கள்ளச்சாராயத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும் சாலைகளிலும் கதறி கொண்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கிறது. இத்தனைக்கு பிறகும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை! நடிகர் விஜய் மட்டும் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்துவிட்ட தமிழர்களுக்கு இடர்நேரங்களில் துணை நிற்க வேண்டும் என உணர்ந்து குரல் கொடுத்துள்ளார்.

மீதமுள்ளவர்கள் யாரை கண்டு‌ அஞ்சுகின்றனர்? ஏழை எளிய மக்கள் ரூ. 200 கொடுத்து டிக்கெட் வாங்குவதால் தான் நீங்கள் ரூ. 100 கோடி, ரூ. 200 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள். அந்த மக்களுக்கு இது போன்ற நேரங்களில் ஆதரவை கொடுக்க வேண்டிய சமூக பொறுப்பு உங்கள் அனைவருக்கும் கட்டாயம் இருக்கிறது. மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை‌ சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்க‌ மாட்டார்கள்!’ எனக் கூறியுள்ளார்.

x