படத்தயாரிப்பு நிறுவனமான லைகா தனக்கு 5 கோடியே 24 லட்சத்து 10 ஆயிரத்து 423 ரூபாய் தர நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார். இருதரப்பையும் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் விஷால் லைகா தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவான ’சண்டக்கோழி2’ திரைப்டத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலைட் வெளியீடு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் கடந்த 2018ல் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.
அதன்படி, 23 கோடியே 21 லட்சத்திற்கு படம் வெளியிடப்பட்டதாக விஷால் தெரிவித்துள்ளார். அதற்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை லைகா நிறுவனம் செலுத்தாததால், அபராரத தொகையுடன் சேர்த்து 4 கோடியே 88 லட்ச ரூபாயை தான் செலுத்தி உள்ளதாக நடிகர் விஷால் கூறியுள்ளார்.
இந்த ஜிஎஸ்டி தொகை மற்றும் அபராதத் தொகையை, வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 24 லட்சத்து 10 ஆயிரத்து 423 ரூபாய் லைகா தனக்கு தர நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று விஷால் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இருதரப்பையும் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி உத்தரவிட்டார்.