"பாஜக, பாமகவை மறைமுகமாக ஆதரிக்க வேண்டும் என்பதற்காக அதிமுக விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிடவில்லை. பாமக, பாஜகவிற்கு 'பி' டீமாக தான் அதிமுக உள்ளது" என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு கோரமண்டல் ரயில் விபத்து உள்ளிட்ட தொடர் விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதை தடுக்க வேண்டிய மத்திய ரயில்வே துறை அமைச்சர், விபத்தை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். ரயில்வே துறைக்கு வழங்கப்படும் நிதியை பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு பயன்படுத்தாமல் சுற்றுலா, மாளிகை மற்றும் பங்களா கட்டுவதற்கு பயன்படுத்துகிறார்கள் என்று சி.ஏ.ஜி. அறிக்கை சொல்கிறது.
மம்தா பானர்ஜி, நிதீஷ் குமார் உள்ளிட்டவர்கள் ரயில்வே துறை அமைச்சர்களாக இருந்தபோது விபத்து நேரிட்ட உடன் துறையிலிருந்து ராஜினாமா செய்தனர். ஆனால் பாஜக அமைச்சர்கள் ஏன் விபத்து நடந்தவுடன் பதவியை ராஜினாமா செய்யவில்லை. வருகிற 22 அல்லது 23 ஆம் தேதி விக்கிரவாண்டியில் காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் நடத்த இருக்கிறோம். திமுக இந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறோம்.
பாஜக, பாமகவை மறைமுகமாக ஆதரிக்க வேண்டும் என்பதற்காக அதிமுக விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிடவில்லை. பாமக, பாஜகவிற்கு பி டீமாக தான் அதிமுக உள்ளது. கர்நாடகாவை சேர்ந்த சோமண்ணா மத்திய அரசின் ஜல் ஜீவன் அமைச்சராக பதவியேற்றுள்ளது ஏற்கெனவே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது வன்மையாக கண்டிக்கதக்கது" என்று அவர் கூறினார்
இதையும் வாசிக்கலாமே...
தமிழகத்தில் இன்று முதல் 21-ம் தேதி வரை இடியுடன் மழை பெய்யும்... வெயிலும் 5 டிகிரி அதிகமாக இருக்கும்!