திமுக கொண்டாட்டம்; ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாட்டம் - அண்ணாமலை ஆவேசம்!


அண்ணாமலை

"தேர்தல் நன்னடத்தை விதிகளைக் காரணம் காட்டி, ரேஷன் கடைகளில், கடந்த மே மாதம் வழங்க வேண்டிய துவரம் பருப்பு மற்றும் பாமாயிலை வழங்காமல் புறக்கணித்த திமுக அரசு, தற்போது 2 மாதங்கள் கடந்தும் பொருட்கள் வழங்காதது கண்டிக்கத்தக்கது" என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், "இந்த ஆண்டு ஜனவரி மாதம், நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, மற்றும் பாமாயிலை நிறுத்தப் போவதாகச் செய்திகள் வெளியாகின. பொதுமக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, அந்த முடிவை திமுக அரசு கைவிட்டது. ரேஷன் கடைகளில், ஒரு கிலோ உளுத்தம்பருப்பு மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, மூன்று ஆண்டுகள் கடந்தும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலையும் நிறுத்த திமுக அரசு முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

ரேசன் கடைகள்

தேர்தல் விதிகளைக் காரணம் காட்டும் திமுக அரசு, அவை நடைமுறைக்கு வருவதற்குப் பல நாட்கள் முன்னதாக, இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே, 60,000 டன் துவரம் பருப்பு மற்றும் 6 கோடி லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்ய வாணிப கழகம் மூலம் டெண்டர் கோரியிருந்தது என்ன ஆனது? பல மாவட்டங்களில், பல நூறு டன் அளவிலான தரமற்ற துவரம் பருப்பு, திரும்பி அனுப்பப்படுவதாகச் செய்திகள் வெளிவந்தன. அந்த நிறுவனங்கள் மீது திமுக அரசு இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?

முதல்வர் ஸ்டாலின்

தங்கள் கையாலாகாத்தனத்தை மறைக்கக் காரணங்கள் தேடுவதை நிறுத்தி விட்டு, உடனடியாக, ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு, மே, ஜூன் இரண்டு மாதங்களுக்கும் வழங்கப்பட வேண்டிய பாமாயிலும், துவரம் பருப்பும் உடனடியாக வழங்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தரமற்ற துவரம் பருப்பை அனுப்பிய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகத்தில் இன்று முதல் 21-ம் தேதி வரை இடியுடன் மழை பெய்யும்... வெயிலும் 5 டிகிரி அதிகமாக இருக்கும்!

x