தர்மபுரி அருகே பள்ளி செல்லும் மகனுக்கு ஜாமின்டரி பாக்ஸ் வாங்கி கொடுப்பதற்காக, சாலையோர கடை முன்பாக நின்றிருந்த தந்தை மீது தனியார் பேருந்து மோதியதில், அவர் மகன் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
தர்மபுரி அருகே மான்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி(36). இவரது மகன் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். சின்னசாமி தன்னுடைய மகனை பள்ளியில் விடுவதற்காக, இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, தனக்கு ஜாமின்டரி பாக்ஸ் வேண்டும் என்று மகன் கேட்டுள்ளார். அதை வாங்குவதற்காக, சோலைகொட்டாய் பகுதியில் உள்ள சாலையோர கடை முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். மகனை இருசக்கர வாகனம் அருகே நிற்க வைத்துவிட்டு, சாலையோர நடைமேடை கடையில் வாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, பாப்பிரெட்டிபட்டியில் இருந்து தர்மபுரி நோக்கி வந்துக்கொண்டு இருந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் நின்றிருந்த சின்னசாமி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மகன் கண்முன்பே தந்தை சின்னசாமி உடல் நசுங்கி உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதியில் மக்கள் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதிகோன்பாளையம் போலீஸார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தனியார் பேருந்து ஓட்டுநரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி திறந்து இரண்டாவது நாளில் மகன் ஆசையாய் கேட்ட ஜாமின்டரி பாக்ஸ் வாங்குவதற்காக சாலையோர கடையில் நின்றிருந்த தந்தை மீது பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!