மறுபடியும் பல்டி அடிக்கப் போகிறாரா? - பாஜகவுடன் நிதிஷ் இணக்கமாக இல்லையென தேஜஸ்வி யாதவ் கணிப்பு!


நிதிஷ் குமார் - தேஜஸ்வி யாதவ்

அரசியல் கூட்டணியில் பல்டிகளுக்குப் பேர்போன நிதிஷ் குமார் இம்முறை பாஜகவுடன் இணக்கம் இழந்திருப்பதாக தேஜஸ்வி யாதவ் கணித்துள்ளார்.

மோடியின் தலைமையில் பாஜக மூன்றாம் முறை மத்தியில் ஆட்சியமைப்பதை தடுக்கும் நோக்கோடு, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ’இந்தியா கூட்டணி’ உருவானது. இந்த கூட்டணியை கட்டமைத்ததில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு முக்கிய பங்குண்டு. ஆனால் கூட்டணி திடமாக அமைந்தபோது, கூட்டணி தலைவர்களுடனான கசப்பில் ’இந்தியா கூட்டணி’யிலிருந்து விலகி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிதிஷ் தாவினார்.

இந்தியா கூட்டணியில் நிதிஷ் குமார்

இப்படி கூட்டணி விட்டு கூட்டணி மாறுவது நிதிஷ் குமாருக்கு புதிதும் அல்ல. இதனால் தேசிய அரசியலில் அவருக்கு பல்டி குமார் என்ற பெயரும் உண்டு. ஆர்ஜேடி உடன் கூட்டணி வைத்திருந்த நிதிஷ் குமார் பாஜக கூட்டணிக்கு தாவி மக்களவைத் தேர்தலை சந்தித்தார்.

ஆனால் இடைப்பட்ட இந்த ஒரு சில மாதங்களில் அவர் பாஜவுடன் இணக்கம் இழந்திருப்பதாக தேஜஸ்வி யாதவ் இன்று தெரிவித்துள்ளார். ஆர்ஜேடி தலைவரான தேஜஸ்வி, முன்னதாக நிதிஷ் குமாருடனான கூட்டணியில் பீகாரின் துணை முதல்வராகவும் இருந்தார்.

பாட்னாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ் “அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்துவது மற்றும் அறிவுறுத்தல்களை வழங்குவது அனைத்தும் ஆளுநர் தான் என்பதை நான் அறிந்தேன். தேர்தல் களத்தில், பாஜக மற்றும் ஜேடியு ஆகிய இரண்டும் தத்தம் தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. இவை அனைத்தும் ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு பீகார் எதற்கோ பெரிய சாட்சியாக அமையப் போகிறது என்ற எனது அச்சத்தை உறுதிப்படுத்துகிறது. மக்களவை தேர்தலுக்குப் பிறகு சாச்சா (நிதீஷ் குமார்) ஒரு பெரிய முடிவை எடுப்பார் என்று நான் கணித்துள்ளேன்” என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்

இதனை உறுதிபடுத்துவது போன்று நிதிஷ் குமாரை மீறி கூட்டணியில் இணைந்து அமைச்சர்களான பாஜகவினர் தலையீடு முதல் மாநில ஆளுநரின் அதிகாரம் வரை பீகாரில் கொடிகட்டிப் பறப்பதாக ஆர்ஜேடி கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். முதலில் பாஜகவுடன் இணைந்தே பீகாரில் ஆட்சியமைத்திருந்த நிதிஷ் குமார் இடையில், பாஜக தனது கட்சியை கரைத்து தன்வயப்படுத்த பார்க்கிறது என்ற ஐயத்தில் அதனுடனான கூட்டணியை உடைத்து, ஆர்ஜேடி உடன் கூட்டணி அமைத்தார் நிதிஷ் குமார்.

ஜனவரியில் மீண்டும் ஆர்ஜேடி உறவைத் துண்டித்து மீண்டும் பாஜக கூட்டணிக்குத் தாவினார். தேஜஸ்வி யாதவ் கணிப்பு சாத்தியமாகுமெனில், மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் பல்டி குமாரின் அடுத்த பல்டிக்கு பீகார் காத்திருக்க வேண்டியிருக்கும்.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு குறி... ட்ரோன் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே திட்டம்

கன்னியாகுமரியில் 3,000 போலீஸார் குவிப்பு... கடல் நடுவே இன்று தியானத்தை தொடங்குகிறார் மோடி!

x