தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்ட திமுக அரசு... இபிஎஸ் காட்டம்


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தின் தண்ணீர் தேவை அண்டை மாநிலங்களை சார்ந்து உள்ளதாகவும், ஆனால் அதில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா அரசுகள் தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சித்து வருவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 17ம் தேதி மறைந்த, முன்னாள் மேயர் தா. மலரவன் வீட்டிற்கு இன்று சென்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மலரவன் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ”மறைந்த மலரவன், கோவை மேயராகவும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்த காலத்தில், பல்வேறு கோவை நகரின் வளர்ச்சி திட்டங்களை செய்து கொடுத்தவர்” என புகழாரம் சூட்டினார்.

எடப்பாடி பழனிசாமி

மேலும்,” கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சிலந்தை ஆற்றில் தடுப்பணை கட்டி வருகின்றனர். இதனால் அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவதுடன், விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். கர்நாடக அரசும் மேக தாதுவில் தடுப்பணை கட்டும் பணியை தொடங்கி இருக்கிறது. இதே போல் ஆந்திரா அரசு பாலாற்றில் தடுப்பணை கட்டும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அண்டை மாநிலங்கள், தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுப்பதில் குறியாக உள்ளனர். தமிழக அரசு உடனடியாக சட்டரீதியான நடவடி நடவடிக்கைகளை எடுத்து தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து பேசிய அவர்,” தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில், பல்வேறு தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமித்தார். அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆறு தடுப்பணைகள் கட்ட திட்டம் தீட்டினோம். அதில் ஒன்று கட்டப்பட்ட நிலையில், அடுத்து வந்த திமுக அரசு தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்களை திமுக அரசு திட்டமிட்டு நீக்கி உள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்தாக இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 இடங்களில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

x