ஊழல் முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இன்று தற்காலிக ஜாமீன் வழங்கியது.
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவாலை, கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை, கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்தது.
கேஜ்ரிவாலின் டெல்லி அரசும், ஆம் ஆத்மி கட்சியும் இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றன. மேலும் தேர்தல் நேரத்தில் கேஜ்ரிவாலை கைது செய்து, அவரை பிரச்சாரம் செய்ய விடமால் தடுக்கும் பாஜகவின் சதி திட்டமே இது என ஆம் ஆத்மி கட்சி ஏற்கெனவே குற்றம்சாட்டியது.
எனினும், விசாரணை அமைப்புகள் தங்கள் வேலையை மட்டுமே செய்கின்றன என்றும், மத்திய அரசு அவற்றின் மீது செல்வாக்கு செலுத்தவில்லை என்றும் பிரதமர் மோடியும், பாஜகவும் ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
கேஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரது மனைவி சுனிதா கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சிக்காக பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.
இதற்கிடையே அர்விந்த் கேஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை எதிர்த்தும், ஜாமீன் வழங்கக் கோரியும், அவரது வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, கேஜ்ரிவாலுக்கு வரும் ஜூன் 1ம் தேதி வரை தற்காலிக ஜாமீன் வழங்கியது. மேலும் வரும் ஜூன் 2ம் தேதி கேஜ்ரிவால் சரணடைய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் வாசிக்கலாமே...