உலகில் எந்த நாகரிக நாடும் குடியுரிமைக்கு மதத்தை அடிப்படை தகுதியாக மாற்றவில்லை... பாஜக, காங்கிரஸ் மீது பினராயி விஜயன் பாய்ச்சல்!


கேரள முதல்வர் பினராயி விஜயன்

உலகில் எந்த நாகரிக நாடும் குடியுரிமைக்கு மதத்தை அடிப்படை தகுதியாக மாற்றவில்லை எனவும், மதச்சார்பின்மை விழுமியங்களை மத்திய பாஜக அரசு சிதைத்து வருவதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

கேரள மாநிலத்தில் வரும் 26-ம் தேதி இரண்டாம் கட்டத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் கண்ணூர் மாவட்டம், மட்டனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் இன்று தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்று பேசியதாவது:

சிஏஏ எதிர்ப்பு போராட்டம்

"பாஜக தலைமையிலான மத்திய அரசின் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நாட்டின் மதச்சார்பற்ற விழுமியங்களுக்கு எதிரானது. சிஏஏவுக்கு எதிராகவும், மதச்சார்பின்மையைப் பாதுகாக்கவும் அனைவரும் முன்வந்தபோது, பாஜக அரசின் நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் எந்த எதிர்ப்பையும் எழுப்பவில்லை.

எந்த நாகரிக நாடும் மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை முடிவு செய்யவில்லை. எந்த நாடும் அகதிகளை அவர்களின் மதத்தின் அடிப்படையில் பிரிப்பதில்லை. குடியுரிமையை தீர்மானிப்பதற்கான அடிப்படை தகுதியாக மதத்தை இந்தியா முன் வைக்கிறது. இதனால் மதச்சார்பற்ற விழுமியங்கள் அழிக்கப்படுகிறது.

காங்கிரஸ், பாஜக

சில ஆண்டுகளுக்கு முன்பு புதுடெல்லியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடத்தியதற்காக கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்பட பல தேசிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், அவர்களில் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இல்லை. மதச்சார்பற்ற கட்சி என்று கூறிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சியால் ஏன் நாட்டில் செயல்படுத்தப்படும் ஆர்எஸ்எஸ் திட்டத்தை எதிர்க்க முடியவில்லை?”

இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.

x