உஷார்... அடுத்த 3 மணி நேரத்தில் தூத்துக்குடி உள்பட 9 மாவட்டங்களில் மழை!


மழை

தமிழகத்தில் தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதல் பெய்து வருகிறது. சென்னையில் வழக்கை விட வடகிழக்கு பருவமழை 50 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாகவும், தமிழகத்தில் வழக்கத்தைவிட 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனாலும், பருவமழை தொடரும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை

இந்த நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வானிலை ஆய்வு மையம்

இந்த நிலையில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி, கன்னியாகுமரி , நெல்லை, தென்காசி, தேனி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தென் மாவட்டங்களில் பெய்த கனமழை பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில் மீண்டும் மழை பெய்யும் என்ற அறிவிப்பு அவர்களை மேலும் அச்சமடைய வைத்துள்ளது.

x