உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், ”உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது.
குடும்ப உறுப்பினர்கள் மூளைச் சாவு நிலையை அடைந்த துயர சூழலிலும் அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன் வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால் தான், இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈன்று பல உயிர்களை காப்பவரின் தியாகத்தினை போற்றிடும் வகையில் இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகள் இனி அரசு மரியாதை உடன் மேற்கொள்ளப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியாவிலேயே தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் முன்னோடி மாநிலமாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.