நெல்லையில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட மறுத்த அமைச்சர்... 'இனி உங்களுக்கு ஓட்டு கிடையாது' என கொந்தளித்த மக்கள்!


அமைச்சர் தங்கம் தென்னரசு

கன மழையால் நெல்லை மாநகர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை மாநகரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு மழை வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட மறுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் தங்கம் தென்னரசு

அதாவது, அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் இன்று காலை மேலப்பாளையம் வழியாக மாவட்டத்தின் பிற பகுதிக்கு ஆய்வுக்காக சென்றனர். அப்போது, மேலப்பாளையத்தில் உட்புற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் மெயின் ரோட்டில் நின்றபடி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் காரை மறித்துள்ளனர். அவர்கள், அமைச்சரிடம் ”ஐயா, இரண்டு நிமிடம் உள்ளே வந்து பாருங்கள் கொஞ்சம் இறங்கி வாருங்கள்” என பாதிக்கப்பட்ட தங்கள் பகுதியை பார்வையிட வரும்படி கெஞ்சுகின்றனர்.

ஆனால், காரை நிறுத்த கூட மனம் இல்லாத அமைச்சர் காரில் அமர்ந்தபடி அங்கிருந்து நகர்ந்து செல்கிறார். உடனே அருகில் சென்ற மக்கள் ”விடியல் அரசு விடியல் அரசு என்று சொல்கிறீர்கள் கொஞ்சம் இங்கே வந்து பாருங்கள். உங்களுக்கு தான் ஓட்டு போட்டோம். கடந்த 25 ஆண்டுகளாக இது திமுகவின் கோட்டையாக இருக்கிறது. இனி உங்களுக்கு ஓட்டு கிடையாது” என ஆதங்கத்தோடு பேசுகின்றனர். இவை அனைத்தும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

x