“அதிமுக ஆட்சி மலரும்போது மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு” - ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை


மதுரை: “காலம் கனிந்து, அதிமுக ஆட்சி மலரும்போது, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்” என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் 70வது பிறந்தநாளையொட்டி, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில், கருப்பட்டியில் அன்னதானம் நடந்தது. ஒன்றியச் செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தொடங்கி வைத்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் மகேந்திரன், மாணிக்கம், கருப்பையா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது ஆர்.பி.உதயகுமார் கூறியது: “சொல்லாத புதிய திட்டங்களை நிறைவேற்றியதால் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என பெருமிதம் கொள்கின்றனர். 3 ஆண்டில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் உருவாகிவிட்டது என பொய் சொல்கின்றனர்.

98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக திரும்ப, திரும்ப சொல்வதால் உண்மையாகிவிடும் என நினைக்கின்றனர். சர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னனாக திமுக கட்சிக்காரர் இருந்திருக்கிறார் என்ற செய்தியால், இந்திய தேசத்திற்கு தலைகுனிவை ஏற்பட்டுள்ளது. 90 லட்சம் பேர் படிப்பை முடித்து வேலை வாய்ப்புக்கென காத்துக்கொண்டிருக்கின்றனர். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி எத்தனை பேருக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளீர்கள்?.

இந்தியாவிலேயே தமிழகம் இன்றைக்கு கடன் வாங்குவதிலே முதலிடத்தில் உள்ளது. மின்சாரக் கட்டணம், சொத்து வரியை ஏற்ற மாட்டோம் என சொன்னீர்கள் ஆனாலும், ஏற்றிவிட்டீர்கள். கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் நடக்காத நாட்க ளே இல்லை. ‘போக்சோ’ வழக்குகள் அதிகமாக பதிவாகிறது.

மதுபோதையால் இளைய சமுதாயம் சீரழிகிறது. தமிழகம் தன்னிறைவு பெற்று முதன்மை மாநிலமாக திகழ்கிறது என பெருமிதம் கொள்ளும் செய்தி குறிப்பை வெளியிட்டிருக்கிறீர்கள். உண்மையில் மக்களோடு நீங்கள் தொடர்பில் இருக்கிறீர்களா அல்லது தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளீர்களாக என புரியவில்லை.

தமிழகம் முதன்மை மாநிலம் என செய்தி குறிப்பு வெளியிடும் உங்களை மக்கள் கேள்வி கேட்பது உங்களின் காதுகளுக்கு எட்டவில்லை. காலம் கனியும். எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி மலரும். மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம்” என்றார்.