பெண் போலீஸாருக்கு மகப்பேறுக்கு பிறகு விரும்பும் இடத்தில் பணி மாறுதல்: டிஜிபி சங்கர் ஜிவால் உறுதி


திருநெல்வேலி: பெண் போலீஸாருக்கு மகப்பேறுக்குப் பிறகு விரும்பும் இடத்தில் பணிமாறுதல் அளிக்கப்படும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் கூறினார்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், தென்மாவட்டங்களின் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக காவல் துறை உயரதிகாரிகளுடன் சட்டம் -ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். நேற்று 2-வது நாளாகநெல்லை மாவட்ட மற்றும் மாநகரஆயுதப்படையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், காவலர்களின் குறைதீர் நிகழ்ச்சியில் பங்கேற்று, விருப்ப பணியிட மாற்றம் கோரிய மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்த மனுக்களை ஆய்வு செய்த பின்னர் போலீஸார் மத்தியில் பேசிய டிஜிபி, "பெண் போலீஸார் மகப்பேறுக்குப் பிறகு விருப்ப மாறுதல் கேட்டு விண்ணப்பித்து இருந்தால், முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில், அவர்களது மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, பணியிட மாறுதல் வழங்கப்படும். இதற்கு அடுத்தபடியாக, கணவன், மனைவி ஒரே இடத்தில் பணிபுரிய விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தால், அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கப்படும். மற்ற காவலர்களுக்கு காத்திருப்பு பட்டியல் அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கப்படும்" என்றார்.

பின்னர், மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் பங்கேற்ற டிஜிபி சங்கர் ஜிவாலிடம், காவலர்கள் மற்றும் அதிகாரிகள் நீண்ட வரிசையில் நின்று, ஊதிய முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த மனுக்களை அளித்தனர்.

பின்னர், பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் உள்ள மண்டபத்தில், காவல் துறையினரின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு, ஊதியம், பதவி உயர்வு, ஓய்வூதியம் தொடர்பான மனுக்களை டிஜிபிபெற்றுக் கொண்டார். தொடர்ந்து, மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் சிபிசிஐடி, மதுவிலக்கு காவல் துறை உட்படவெவ்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும், ஓய்வுபெற்ற காவல்துறையினருடன் கலந்துரையாடினார். அதேபோல, தென் மாவட்டங்களில் சிறப்பாகப் பணியாற்றிய காவலர்கள் மற்றும் அதிகாரிகள் 50 பேருக்கு நற்சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில், தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா, நெல்லை காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, டிஐஜி மூர்த்தி, எஸ்.பி.க்கள் என்.சிலம்பரசன் (திருநெல்வேலி), சீனிவாசன் (தென்காசி), ஆல்பர்ட் ஜான் (தூத்துக்குடி), சுந்தரவதனம் (கன்னியாகுமரி), திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் சுகபுத்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x