துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்: அமைச்சரவையில் முக்கிய மாற்றம்


உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தின் துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின். இது குறித்த அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு தமிழகத்தின் ஆறு அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மூன்று அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் ஆவடி நாசர் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். கோ.வி.செழியன் மற்றும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோரும் அமைச்சர்களாக உள்ளனர்.

தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து பேச்சு அதிகம் பேசப்பட்டு வந்த நிலையில் அவருக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு அவர் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

இலாகா மாற்றப்பட்ட அமைச்சர்கள்: தற்போது உயர் கல்வித்துறை அமைச்சராக உள்ள பொன்முடிக்கு வனத்துறை அமைச்சர் ஆக பணியாற்ற உள்ளார். இதே போல சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யன்தான், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக உள்ள கயல்விழி செல்வராஜுக்கு மனிதவள மேம்பாட்டு துறையும், வனத்துறை அமைச்சராக உள்ள மதிவேந்தனுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பனுக்கு பால்வளத்துறையும், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசுக்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கீடு.

நீக்கப்பட்ட அமைச்சர்கள்: அமைச்சரவையில் இருந்து செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ள இந்த பரிந்துரைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக் கொண்டுள்ளார்.

x