தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கத்தின் புதிய கிளை தொடக்கம்


சென்னை: தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கத்தின் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோயில்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக சட்டப்பேரவை தொகுதி வாரியாக கிளைகள் தொடங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கத்தின் சென்னை கோட்டம் சார்பில் சென்னை வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட திருவான்மியூர் மற்றும் வேளச்சேரி பகுதி நிர்வாகிகளை உள்ளடக்கிய புதிய கிளை நேற்று தொடங்கப்பட்டது.

பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோயிலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அஷ்டலட்சுமி கோயில் மேலாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். பாம்பன் சுவாமி கோயில் மேலாளர் திருநாவுக்கரசு, தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கத்தின் சென்னை கோட்ட தலைவர் எஸ்.தனசேகர், நிர்வாகிகள் வாசுகி, ரமேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது, 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை, அரசு ஊழியர் போல் திருக்கோயில் பணியாளர்களுக்கு விடுப்பு சலுகைகள் மற்றும் இதர சலுகைகள் உட்பட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.