வள்ளலார் சர்வதேச மையத்தில் இடம்பெறும் வசதிகள் என்னென்ன?... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


சென்னை உயர்நீதிமன்றம்

வடலூரில் சத்திய ஞானசபை நிலத்தில் அமைக்கப்படும் வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதிகள் செய்யப்பட உள்ளன என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சத்திய ஞான சபை

கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள வள்ளலார் தெய்வ நிலையத்தின் சத்திய ஞானசபை முன்புள்ள 70 ஏக்கர் பரப்பில் உள்ள பெருவெளியில் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க ஒப்புதல் அளித்து, தமிழக அரசு 2023ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு தடை விதிக்கக்கோரி பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீக மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

சத்திய ஞான சபை

'அருட்பெருஞ்சோதி தரிசனத்துக்காக பக்தர்கள் கூடும் இடத்தில் கட்டுமானம் மேற்கொண்டால், அது தன் புனிதத்தை இழந்து விடும். நூறு ஆண்டுகளைக் கடந்த புராதன கோவிலில் மாற்றங்களை செய்வது புராதன சின்னங்கள் சட்டத்துக்கு விரோதமானது. அரசுக்கு சொந்தமாக அருகில் ஏராளமான நிலம் உள்ளதால் அங்கு வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்கலாம் எனவும், கோவில் சொத்துக்களை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடாது' எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், 'சத்திய ஞான சபையை அரசு எடுத்துக் கொள்ள முயற்சிப்பதாக கூறுவது தவறு. சர்வதேச மையம் அமைத்தாலும், அந்த நிலம் ராமலிங்க அடிகளார் அறக்கட்டளை வசம் தான் இருக்கும். மேலும், தைப்பூச நாளில் ஜோதி தரிசனத்துக்காக மூன்றரை லட்சம் பக்தர்கள் திரள்வார்கள்.

சத்திய ஞான சபை முன் அமைந்துள்ள 70 ஏக்கர் நிலத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என பக்தர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்ததால், அங்கு நூலகம், அருங்காட்சியகம், ஓய்வறைகள், மருத்துவ வசதிகள் ஏற்படுத்தும் வகையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படுகிறது” எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதிகள் இடம்பெறப் போகின்றன என்பது குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 24ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

தலையில் விசிக; கழுத்தில் திமுக... பறையடித்து பட்டையைக் கிளப்பிய திமுக வேட்பாளர்!

x