பாம்பன் கடற்பகுதியில் 700 கிலோ கடல் அட்டைகளை கடத்த முயற்சி: கடலோர காவல்படை பறிமுதல்


பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை சாக்குகள்

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பன் கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட 700 கடல் அட்டைகளை கடலோர காவல்படையினர் நேற்று மாலை பறிமுதல் செய்தனர்.

பாம்பன் தெற்கு மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மண்டபம் நிலைய கடலோரக் காவல்படையினர் நேற்று மாலை ரோந்து பணியின் போது, சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு நாட்டுப்படகு கரையை நோக்கி வருவதை பார்த்ததும், படகை கடலோரக் காவல்படையினர் நெருங்கிச்சென்றனர்.

கடலோரக் காவல்படையினரின் ரோந்துப் படகை பார்த்ததும் படகிலிருந்தவர்கள் நாட்டுப்படகை கரையில் விட்டு தப்பிச் சென்றுள்ளனர். தொடர்ந்து நாட்டுப்படகை பறிமுதல் செய்து கடலோர காவல்படையினர் சோதனையிட்டதில், படகில் சுமார் 25 சாக்குப் பைகளில் சுமார் 700 கிலோ கடல் அட்டைகள் இருந்தன. பின்னர் பறிமுதல் செய்த கடல் அட்டைகளை கடலோர காவல்படையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்த முயன்ற கடத்தல்காரர்கள் குறித்து கடலோர காவல்படையினரும, வனத்துறையும் விசாரித்து வருகின்றனர்.

x