கரூரில் முதியவர் தவறவிட்ட ரூ.50,000 பணம், செல்போன்: அரை மணி நேரத்தில் திரும்ப கிடைத்தது


கரூர் நகர காவல் நிலையத்தில் முதியவர் தவறவிட்ட ரூ.50,000 மற்றும் ஆவணங்களை அவரிடம் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஒப்படைக்கிறார். அருகில் உதவி ஆய்வாளர் நாகராஜ், லியாகத் உசேன் அன்சாரி.

கரூர்: கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையைச் சேர்ந்தவர் திருவேங்கடம் (66). பத்திர எழுத்தர். இவர் இன்று (செப். 26) மதியம் ரூ.50,000 பணம், பத்திர ஆவணங்கள் மற்றும் செல்போனை ஓரு பையில் வைத்து கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அவர் செல்லும் வழியில் பை கீழே விழுந்து நிலையில் திருவேங்கடம் அதனை கவனிக்காமல் சென்றுவிட்டார்.

கரூர் அன்சாரி தெருவை சேர்ந்த லியாகத் உசேன் அன்சாரி அவரது இரு சக்கர வாகனத்தில் வந்தப்போது கீழே கிடந்த பையை எடுத்து பார்த்தப்போது அதில் ரூ.50,000, பத்திர ஆவணங்கள், செல்போன் ஆகியவை இருந்துள்ளது. உடனே லியாகத் உசேன் அன்சாரி அதனை கரூர் நகர காவல் நிலையம் சென்று ஒப்படைத்துள்ளார்.

கரூர் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் செல்போன் மூலம் திருவேங்கடத்தை தொடர்புக் கொண்டு விபரம் தெரிவித்தனர். இதையடுத்து கரூர் நகர காவல் நிலையத்திற்கு வந்த திருவேங்கடத்திடம் ரூ.50,000, பத்திர ஆவணங்கள், செல்போன் ஆகியவற்றை லியாகத் உசேன் அன்சாரி முன்னிலையில் திருவேங்கடத்திடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

கீழே தவறவிட்ட ரூ.50,000, பத்திர ஆவணங்கள், செல்போன் ஆகியவை அரை மணி நேரத்திற்குள் திரும்பக் கிடைக்கப்பெற்றதால் மகிழ்ச்சியடைந்த திருவேங்கடம் காவல் துறையினர் மற்றும் லியாகத் உசேன் அன்சாரி ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்தார்.

x