வார்த்தைகளை அடக்கவில்லை என்றால்... உதயநிதி ஸ்டாலினை எச்சரிக்கும் தமிழிசை


தெலங்கானா ஆளுநர் தமிழிசை

``வார்த்தைகளை அடக்கவில்லை என்றால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எதிர்மறை தலைவராக மாறிவிடுவார்'' என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னையைப்போல் விடாமல், கோவையில் ஆட்சியாளர்கள் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்தது மன வருத்தம் அளிக்கிறது. ரத்தம் சிந்தி இருக்கிறது.

கோயில் முறையாக நடைபெறவில்லை. வைகுண்ட ஏகாதேசி நேரத்தில் நடைபெற்றுள்ளது. ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று. இது இந்து மதத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இன்னும் அதிகமாக கண்காணிப்பு தேவை. உண்டியலை எடுக்க குறியாக இருப்பதில் காட்டும் அக்கறை, பாதுகாப்பிலும் இருக்க வேண்டும்.

தமிழிசை

காஷ்மீர் முழுவதுமாக நம்மோடு இணைந்து இருக்கும் வகையில் தீர்ப்பு வந்து இருக்கிறது. பெரியாரை, தேசிய விரோத கருத்துகளை பகிர்வதற்கு கேடயமாக திமுகவினர் பயன்படுத்துகின்றனர். பெரியாரின் கருத்துகள் மதிக்க கூடியது. ஆனால் அவர் இனத்தின் விடுதலையை மாநிலத்தோடு ஒப்பிடுவதை ஏற்கமாட்டார். பெரியாரின் கருத்துகளை அழுத்தமாக பதிவு செய்வோம் என முதல்வர் தெரிவிக்கிறார். ஆனால் பெண்களுக்கு உரிமை கொடுக்கும் ஆட்சிதான் மத்தியில் இப்போது நடக்கிறது.

திமுகவும், கூட்டணி கட்சிகளும் தாரை வார்த்ததை இந்த அரசு மீட்டு எடுத்து கொண்டு வருகிறது. காஷ்மீர், ஆளுநர், கச்சத்தீவு என மத்தியில் ஆட்சியில் இருந்த பொழுது செய்யாத விஷயங்களை இப்பொழுது திமுக பேசிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு அம்னீசியா. ஆளுநர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் என்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்று. கருத்தை கருத்தால் எதிர் கொள்ள வேண்டும். கேரள ஆளுநர் மீது தாக்குதல் முயற்சி, வன்மையாக கண்டிக்கதக்கது” என்றார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை

மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு, ”கலைஞர் உரிமை தொகை என்பது கலைஞரா கொடுக்கிறார். வார்த்தைகளை அடக்கவில்லை என்றால் உதயநிதி ஸ்டாலின் எதிர்மறை தலைவராக இந்தியா கூட்டணியிலும், மற்ற இடங்களிலும் உருவாவார். கலைஞரின் பேரனா நீங்க? அவர் இப்படியா பேசினார்? திட்டுவதாக இருந்தாலும் அழகு தமிழில் திட்டுவார். திமுக யாருடைய அப்பன் வீட்டு சொத்து? திமுக தொண்டர்கள் இந்த கேள்வியை முதலில் உதயநிதியிடம் கேட்க வேண்டும்” என தமிழிசை தெரிவித்தார்.

x