விடுதலைப் போராட்ட வீரர் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்புக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை


தஞ்சாவூர்: விடுதலைப் போராட்ட வீரர் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்புக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின், மாநிலக் குழு கூட்டம், தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, அமைப்பின் மாநிலத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.நூர்முகமது தலைமை வகித்தார். மாநிலப் பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் அறிக்கை முன்வைத்துப் பேசினார்.

இந்தக் கூட்டத்தில், “விடுதலைப் போராட்ட வீரர் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்புக்கு மதுரையில் மணிமண்டபம் அமைத்து, வருடம் தோறும் அவரது பிறந்த நாள், நினைவு நாளை அரசு சார்பில் கொண்டாட வேண்டும். சிறுபான்மை மக்களுக்கான நல உதவிகள் முறையாக வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ள சிறுபான்மை மக்களுக்கு குடிமனைப் பட்டா உடனடியாக வழங்க வேண்டும்” என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.