தேர்தல் விதிமுறை மீறல்... நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்கு!


மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீது தேனாடுகம்பை காவல் துறையினர் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், மத்திய இணை அமைச்சரும், தற்போதைய பாஜக வேட்பாளருமான எல்.முருகன் மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த மார்ச் 25-ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்த அவரின் வேட்புமனு நேற்று ஏற்கப்பட்டது.

பாஜக

இந்தநிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நீலகிரி தேனாடுகம்பை காவல்துறையினர் அவர் மீது இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி, கடந்த மார்ச் 25-ம் தேதி உதகையை அடுத்துள்ள கடநாடு கிராமத்தில் முன் அனுமதி பெறாமல் எல்.முருகன் கூட்டம் நடத்திய கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் முன் அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதால், தேர்தல் பறக்கும் படை துணை தாசில்தார் தனலட்சுமி, தேனாடுகம்பை காவல்நிலையத்தில் எல்.முருகன் மீது புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நீலகிரி பாஜக மாவட்ட தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் மீது தேர்தல் விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x