நெல்லை - கொல்லம் இடையே மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கிய ரயில்கள் மீண்டும் வருமா? - பயணிகள் எதிர்பார்ப்பு


தென்காசி: நெல்லை - கொல்லம் இடையே மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கிய ரயில்கள் மீண்டும் வருமா என்று ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி - கொல்லம் இடையே தென்காசி வழியாக கடந்த 1904-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கியது. பின்னர், அகல ரயில் பாதை பணிகள் கொல்லம் - புனலூர், புனலூர் - செங்கோட்டை, செங்கோட்டை - திருநெல்வேலி, திருநெல்வேலி- திருச்செந்தூர் என பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இந்தப் பணிகளின் போது குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகள் நிறைவு பெறாததால் நேரடி ரயில்கள் இயக்கம் தடைபட்டது.

மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்த காலத்தில் திருநெல்வேலியில் இருந்து காலை 7 மணி, 9 மணி, மதியம் 1 மணிக்கு தென்காசி வழியாக கொல்லத்துக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த நேரடி ரயில்கள் தமிழ்நாடு மற்றும் கேரள மக்களுக்கு வர்த்தகரீதியாக மிகவும் உதவிகரமாக இருந்தன. ஆனால், அகல ரயில் பாதையாக்கப்பட்ட பிறகு இந்த வழித்தடத்தில் திருநெல்வேலியில் - இருந்து கொல்லத்துக்கு நேரடி ரயில்கள் இயக்கப்படவில்லை. மீட்டர் கேஜ் காலத்தில் ரயில்கள் இயங்கியதை போல தற்போதும் நேரடி ரயில்கள் இயக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

காலை 7 மணி, 9.45 மணி மற்றும் மதியம் 1.50 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் திருநெல்வேலி - செங்கோட்டை ரயில்களை கொல்லம் வரை நீட்டிக்க வேண்டும். மறு மார்க்கத்தில் காலை 6.20 மணி, மாலை 3 மணிக்கு கொல்லத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ரயில்களை இயக்க வேண்டும். மாலை 5.20 மணிக்கு கொல்லத்தில் புறப்படும் கொல்லம் - புனலூர் ரயிலை தென்காசி வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் பாண்டியராஜா தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில், 'செங்கோட்டை - கொல்லம் இடையே மீட்டர் கேஜ் காலத்தில் 8 ஜோடி ரயில்கள் இயங்கி வந்த நிலையில் தற்போது வெறும் 3 ஜோடி ரயில்களே இயங்கி வருகின்றன. தென்காசி வழியாக திருநெல்வேலி - கொல்லம் இடையே மூன்று ஜோடி பயணிகள் ரயில்கள் இயங்கி வந்த நிலையில் தற்போது ஒரு ரயில் கூட இயக்கப்படாமல் உள்ளது.

திருநெல்வேலி- கொல்லம் இடையே காலை மற்றும் மாலை வேளைகளில் பயணிகள் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தமிழ்நாடு - கேரளா இடையே வணிக போக்குவரத்துக்கு பெரும் உதவியாக இருக்கும். மாணவர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள், கேரளாவுக்கு மருத்து சிகிச்சைக்குச் செல்வோர் என அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அடுத்த மாதம் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ள நிலையில், திருநெல்வேலி - கொல்லம் நேரடி ரயில்களை தொடங்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

x