சேத்துப்பட்டு சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி தீவிரம் 


சென்னை: சேத்துப்பட்டில் 16 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் இரண்டாம் கட்டமாக, 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் ஒரு வழித்தடம் மாதவரம் - சிறுசேரி சிப்காட் (45.4 கி.மீ.) வரையிலான வழித்தடம் ஆகும். இங்கு 50 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இந்த வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒருபகுதியாக, சேத்துப்பட்டு மின்சார ரயில் நிலையம் அருகே சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ''மாதவரம் - சிறுசேரி சிப்காட் 3-வது வழித்தடத்தில் பெரம்பூர், சேத்துப்பட்டு மின்சார ரயில் நிலையங்களுடன், மெட்ரோ ரயில் நிலையங்கள் இணைக்கப்பட உள்ளன. சேத்துப்பட்டில் 16 மீட்டர் ஆழத்தில் 150 மீட்டர் நீளம், 19 மீட்டர் அகலத்தில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

சேத்துப்பட்டு மெட்ரோ ரயில் நிலைய சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. மற்ற கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மின்சார ரயில்நிலையத்துக்கு பயணிகள் செல்லும் வகையில் பாதசாரிகள் பாதை, நடைமேம்பாலம் உள்ளிட்ட கட்டமைப்பு மேற்கொள்ளப்படும். இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பணிகளை 2028-க்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்'' என்றார்.

x