கிண்டி ரேஸ் கிளப் இடத்தில் புதிய நீர்நிலையை உருவாக்க முடியுமா? - தமிழக அரசு பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு


சென்னை: கிண்டி ரேஸ் கிளப்பில் புதிய நீர்நிலையை உருவாக்க முடியுமா என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

வேளச்சேரி ஏரியை சீரமைப்பது தொடர்பான வழக்கு, தேசியபசுமை தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வேளச்சேரி பகுதியில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க, ஏரியின் கீழ் பகுதியில் உள்ள 5 ஏரிகளை ஆழப்படுத்தி, நீர் கொள்திறனை அதிகப்படுத்துவது, ஏரிக்குமேல் பகுதியில் உள்ள கிண்டிதேசிய பூங்காவில் நீர்நிலைகள் இருந்தால் அவற்றை ஆழப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

இதனிடையே. சென்னை கிண்டிரேஸ் கிளப் நிறுவனத்துக்கு தமிழகஅரசு சார்பில் 160.86 ஏக்கர் நிலம் கடந்த 1945-ம் ஆண்டு முதல் 99ஆண்டுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. இந்த நிலம் பொதுமக்கள்பயன்பாட்டுக்கு தேவைப்படுவதால் குத்தகையை ரத்து செய்து,அங்கு மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தஇருப்பதாக அரசு அறிவித்துள்ளது.

வெள்ள பாதிப்பை தடுக்கலாம்: இந்நிலையில், வேளச்சேரி ஏரி தொடர்பான வழக்கு பசுமை தீர்ப்பாய அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ``கிண்டி ரேஸ் கிளப் இயங்கிய இடத்தை பசுமைப் பூங்காவாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ள நிலையில், நீர்நிலையுடன் கூடிய பூங்காவாக உருவாக்கினால் பெருமழை காலங்களில் அதிக அளவு நீரை சேமித்து, வெள்ள பாதிப்பை தடுக்க முடியும். இதுகுறித்து தமிழக அரசு பரீசீலிக்க வேண்டும். புதிய நீர்நிலையை உருவாக்குவது குறித்து அரசிடம்பதில் பெற்று, அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும்''என்று அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர்.

x