தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு


சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

இன்றும், நாளையும் (செப். 23, 24) வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். வரும் 25, 26-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 27, 28-ம் தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரிசெல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

தமிழகத்தில் செப். 22-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் காட்டுமயிலூரில் 7 செ.மீ. வேப்பூரில் 5 செ.மீ. விழுப்புரம் மாவட்டம் அரசூர், திருவெண்ணெய்நல்லூர், கடலூர் மாவட்டம் மீ.மாத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழை பதிவாகிஉள்ளது.

மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல்வரும் 26-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

x