கோவையில் மின்சாரம் பாய்ந்து சிறுவன், சிறுமி உயிரிழப்பு: பூங்காவில் மின்கசிவு காரணமா?


மின்கசிவு ஏற்பட்டு சிறுவன், சிறுமி உயிரிழந்த பூங்கா

கோவை: மின்சாரம் பாய்ந்து சிறுவன், சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் பூங்காவில் சரிவர பராமரிக்காத மின்வயரிலிருந்து மின்கசிவு ஏற்பட்டதா என காவல்துறையினர், மின்வாரியத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி அருகே, துடியலூர் சாலையில் ராணுவ வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான ராமன் விகார் என்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இக்குடியிருப்பில் 400 குடும்பங்கள் வசிக்கின்றனர். நாட்டின் முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், பணிபுரிபவர்கள் இங்கு வீடுகளை வாங்கி வசிக்கின்றனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த பிரசாந்த் ரெட்டியின் மகன் ஜியான்ஸ் ரெட்டி (4), நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த பாலசுந்தர் மகள் வியோமா பிரியா (8) ஆகியோர் உட்பட 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில், அவ்வளாகத்தில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அந்நேரத்தில் லேசான சாரல் மழை பெய்தது. அப்போது அங்கு உள்ள சறுக்கு விளையாட்டில் சிறுவன் ஜியான்ஸ் ரெட்டி, வியோமா பிரியா ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்த போது, இருவர் மீதும் மின்சாரம் தாக்கியது.

தகவலறிந்த குழந்தைகளின் பெற்றோர்கள் அங்கு வந்து மின்சாரம் தாக்கி கீழே விழுந்து கிடந்த 2 குழந்தைகளையும் மீட்டு சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது, குழந்தைகள் இருவரும் முன்னரே உயிரிழந்தது தெரியவந்தது.

அச்சிறுவர் விளையாட்டு பூங்கா, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மின் விளக்கு அமைக்க, தரைக்கு அடியில் மின் வயர்கள் மூலம் மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த மின் வயர்கள் சரிவர பராமரிக்காததால் சேதமாகி இருந்தாக கூறப்படுகிறது.

மின்வயரை பராமரித்திருந்தால் 2 குழந்தைகளும் உயிரிழக்க நேர்ந்திருக்காது எனத்தெரிகிறது. இச்சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை பாலசுந்தர் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் (சட்டப்பிரிவு 174) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து அப்பூங்காவில் மின்வாரிய அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். மேலும், காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையிலான போலீஸாரும் அங்கு சென்று ஆய்வு செய்தனர். சரிவர பராமரிக்காத மின்வயரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டது தான் காரணமா என இருதரப்பினரும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஜியான்ஸ் ரெட்டி, வியோமா பிரியா ஆகியோரின் உடல்கள் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன.

x